தமிழ்நாடு
பலத்த காற்று வீசும்: குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
கடலில் பலமான காற்று வீசும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் யாரும் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட வானிலை அறிவிப்பில், தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என கூறியுள்ளது.
மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நல்ல பெய்து வருகிறது. இந்த மழை சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழையாக நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில், கேரள மாநிலத்தின் பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழாவில் எதிர்பார்த்த மழை தொடங்கி விட்டது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளம் முழுவதும் மழை பெய்யும். தென்சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.