தமிழ்நாடு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை அறிவிப்பு!
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வங்க கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் உள்ள மேலும் சில மாவட்டங்களிலும் புதுவையில் உள்ள அனேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.