தமிழ்நாடு
மீண்டும் தமிழகத்தைப் புரட்டிப் போட வருகிறது கனமழை… 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்ட அறிவிக்கையில்,
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களுக்குத் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டத்தின் புவனகிரியில் அதிகபட்சமாக 11 சென்டி மீட்டர் மழைப் பெய்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.