தமிழ்நாடு
11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நாகை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 8 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழுந்ததுள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் பரவலாக மழைபெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.