தமிழ்நாடு
தஞ்சை, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டலம், ‘அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.