தமிழ்நாடு
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் அதிகபட்சமாக 21 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது’ என்று கூறியுள்ளது வானிலை மையம்.