தமிழ்நாடு
நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வால் தமிழகத்திற்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
வங்க கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு கனமழை பாதிப்பு உண்டா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் கடந்த மாதம் அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்பதும் அவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே. இந்த கனமழை காரணமாக சென்னை உள்பட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து மழை குறைய ஆரம்பித்ததை அடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை முதல் 19ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் 19 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தமிழக கடற்கரையோர பகுதி வழியாகவே இந்த காற்றழுத்த தாழ்வு மையம் கடந்து விடும் என்றும் தமிழகத்திற்கு இனி கனமழைக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.