தமிழ்நாடு
தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் அரசு கட்டணமே வசூலிக்க வேண்டும்: அதிரடி உத்தரவு
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்றும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் இணைந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில் சென்னை மருத்துவ கல்லூரியில் மாணவர்களை பார்வையிட சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தேசிய மருத்துவ ஆணையம் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்தாத தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் பிரத்யேக தொலைபேசி எண்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு மருத்துவக் கல்லூரி வாங்கும் கட்டணமே வசூல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.