உலகம்
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதுவகை கொரோனா… இந்தியாவை பாதிக்குமா?
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், இந்தியாவில் எந்த மாதிரி தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து ஆலோசனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவுவதாகவும், இது முன்னர் தோன்றிய வைரஸைவிட அதிகவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த அதிர்ச்சிகர கண்டுபிடிப்பு குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு, உலக சுகாதார அமைப்பிடமும் தெரியப்படுத்தியுள்ளது. சீக்கிரமே உலக சுகாதார அமைப்பு, இது குறித்து இங்கிலாந்துக்குச் சென்று விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. இங்கிலாந்தின் தென் பகுதியில் இந்த புதுவித வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாதம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது மிக அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு இந்தப் புதிய வைரஸ் தொற்றும் ஓர் காரணம் என்று தெரிகிறது. இந்த புதுவித வைரஸால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்குமா என்பது குறித்து இதுவரை உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. இது புது வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் நேற்று முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று கூறி அதிக கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் அமல் செய்யப்பட்டுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து உடனான விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இந்தியாவிலும் இது போன்று இங்கிலாந்து உடனான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால் இந்தப் பிரச்சனை விரைவில் பூதாகரமாக வாய்ப்புள்ளதால் மிகுந்த முன்னச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.