பர்சனல் ஃபினான்ஸ்
எச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்!
ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் பெயரில், எச்டிஎப்சி வங்கி தங்களது வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு, கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து சலுகை அளித்துள்ளது.
இந்த தவணை சலுகை என்பது, தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பே தவிர வட்டி தள்ளூபடி இல்லை என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு கடன் தவணையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். எனவே கூடுதல் வட்டி செலுத்த வேண்டி வரும்.
எனவே எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் இந்த தவணை காலக்கெடு நீட்டிப்பு சலுகையை எப்படி பெறுவது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
1) புதிய கடன் தவணை தள்ளுபடி குறித்த தெரிந்துகொள்ள வேண்டியவை
ஆர்பிஐ முதலில் வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கடன் தவணையைச் செலுத்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் முடியும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. பின்னர் மீண்டும் இரண்டாவது அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ மீண்டும் கடன் தவணையைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.
2) யார் எல்லாம் இந்த சலுகையைப் பெறலாம்?
எச்டிஎப்சி வங்கியின் கடன் சேவைகளின் கீழ் மார்ச் மாதத்திற்கும் முன்புவரை கடன் பெற்றவர்கள் அனைவரும் இந்த கடன் சலுகையைப் பெறலாம். இரண்டாவது அறிவிப்பின் படி ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு வரை கடன் பெற்றவர்களும் கடன் தவணையைச் செலுத்துவதற்கான சலுகையைப் பெறலாம்.
3) மார்ச்- மே வரை கடன் தவணை சலுகை பெற்றவர்களுக்குத் தொடர்ந்து சலுகை கிடைக்குமா?
இல்லை. மீண்டும் மூன்று மாத கடன் சலுகை வேண்டும் என்பவர்கள் மற்றொரு முறை வங்கிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். சென்ற முறை கடன் தவணை சலுகை பெறவில்லை என்றாலும் இந்த முறை சலுகை பெற விண்ணப்பிக்கலாம். சலுகை வேண்டுமா? வேண்டாமா? என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தேர்வே ஆகும்.
4) கடன் தவணை சலுகை வேண்டாம் என்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கடன் தவணை சலுகை வேண்டாம் என்பவர்கள், வங்கிகளில் தொடர்ந்து தங்கள் தவணையைச் செலுத்தலாம். கடன் தவணை சலுகையைப் பெற்றால் கூடுதல் வட்டி மற்றும் தவணைகள் என செலவுகள் அதிகரிக்கும். எனவே தவணையைத் தள்ளிப்போடாமல் கடனை திருப்பி செலுத்துவதே சாலச் சிறந்தது.
5) கடன் சலுகை பெற்றால் எவ்வளவு கூடுதல் செலவாகும்?
36 மாத தவணையில் ரூ. 8 லட்சம் மோட்டார் கடன் பெற்று 6 மாத கடன் சலுகையைப் பெற்றால் 25,500 ரூபாய் கூடுதல் செலவாகும்.
6) என்ஆர்ஐ (NRI) கடன் தவணை சலுகையைப் பெற முடியுமா?
இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 6 மாத கடன் சலுகை கிடைக்கும்.
7) ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்று இருந்தாலும் சலுகை கிடைக்குமா?
ஒரே வங்கியில் எத்தனை கடன் பெற்று இருந்தாலும் கடன் தவணை சலுகையைப் பெற முடியும்.
8) கடன் தவணை சலுகை கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்குமா?
தனிநபர் கடன், வாகன கடன் போன்று கிரெடிட் கார்டு கடன் தவணைகளுக்கு சலுகைகள் உண்டு.