இந்தியா
ஐசிஐசிஐ சாந்தா கோச்சார் ஜாமின் மனு.. மும்பை ஐகோர்ட் அளித்த உத்தரவால் சிபிஐ அதிர்ச்சி!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிபிஐ அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக சாந்தா கோச்சார் அவர்கள் இருந்தபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ 3250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும் இந்த கடன் தொகை வீடியோகான் நிறுவனத்திடமிருந்து சாந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டன. இந்த நிலையில் தங்களது கைது சட்டப்படி இல்லை என்றும் தங்களிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து இருப்பதாகவும் எனவே தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஜாமின் வேண்டும் என்றும் சாந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த ஜாமீன் மனு மீதான வழகின் விசாரணை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவரது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மும்பை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு சிபிஐ அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகளீன் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.