இந்தியா
வெறுப்பு பேச்சுக்கள்… அரசியலில் மதம்… உச்ச நீதிமன்றம் கவலை!
அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். தற்போது அரசியல் பேச்சுக்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலையாக தெரிவித்துள்ளனர்.
இந்து சமாஜ் அமைப்பினர் மகாராஷ்டிராவில் பேரணி நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம். ஜோசப், பிவி. நாகரத்னா அமர்வு, நேரு, வாஜ்பாய் போன்ற மிகப்பெரிய பேச்சாளர்களின் பேச்சை கேட்க மணிக்கணக்கில் காத்திருப்பார்கள் மக்கள் ஆனால் தற்போது அவர்களின் இடத்தை சிறிய குழுக்களை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது அறிவு மற்றும் கல்வி இல்லாததால் வருகிறது. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதன் முலம் நாட்டின் கண்ணியமே உடைபடுகிறது. சிறுபான்மையினரை சகோதர்கள் போல நடத்த வேண்டும். அவர்களை இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றனர் நீதிபதிகள்.
இதில் குறுக்கிட்ட இந்து சமாஜின் வழக்கறிஞர் மத பேரணி நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி பிவி. நாகரத்னா, மத பேரணி நடத்த உரிமை உண்டு. ஆனால் பேரணியில் பங்கேற்பவர்கள் என்ன செய்கிறார்கள். நமது முன்னோர்கள் கட்டி காத்த சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மற்றவர்களின் கலாசாரத்தை ஏற்றுக்கொள்வதே, சகிப்புத்தன்மை என்று குறிப்பிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.