தமிழ்நாடு
ப.சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வாதிகாரி: எச்.ராஜா ஆவேசம்!
![H Raja - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/H-Raja-1.jpg)
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவசர அவசரமாக ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ, அவரை கைது செய்ய சுவர் ஏறி குதித்து சென்றதும், கதவை உடைத்ததும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதிகாரிகளின் இந்த செயலை பல தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இந்த கைதுக்கு ஆதரவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர் எப்போதும் நான் குற்றம் செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையெல்லாம் கண்டு மத்திய அரசு அஞ்சாது என கூறியுள்ளார்.
மேலும் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வாதிகாரி. 1991-இல் கண்டணூரில் எனது தகப்பனாரின் மாணவர் ராமசாமி அம்பலம் அவர்கள் ஊர் முழுவதும் தாமரை வரைந்து பாஜகவிற்கு வாக்களிக்க சுவர் விளம்பரம் செய்திருந்தார். என் ஊரில் பாஜகவா என்று கூறி அவரை அழைத்து மிரட்டி அனைத்தையும் அழிக்கச் சொன்னவர் ப.சிதம்பரம் என பதிவிட்டுள்ளார்.