தமிழ்நாடு
நான் பேசிய வார்த்தைக்கு விக்கிபீடியாவில் விளக்கம் உள்ளது. எச். ராஜா
பத்திரிக்கையாளர்கள் குறித்து தான் எந்தவித அவமரியாதையான வார்த்தையும் உபயோகபடுத்தவில்லை என்றும் விக்கிப்பீடியாவில் உள்ள, ஏற்கனவே விகே சிங் உள்ளிட்டோர் பயன்படுத்திய வார்த்தையை தான் பயன்படுத்தியதாகவும் எச். ராஜா தெரிவிதுள்ளார்.
நேற்று ஜி மோகன் இயக்கிய ’ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையை பேசினார். இந்த வார்த்தைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, எச். ராஜா சம்பந்தப்பட்ட எந்த செய்தியையும் இனிமேல் எடுக்க வேண்டாம் என அனைத்து ஊடகங்களுக்கும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா அவர்கள் பத்திரிகையாளர் குறித்து தான் எந்தவிதமான சர்ச்சைக்குரிய வார்த்தையும் பேசவில்லை என்றும் தான் கூறிய வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து விக்கிப்பீடியாவில் இருக்கிறது என்றும் அதை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
மேலும் தான் பயன்படுத்திய வார்த்தை ஏற்கனவே விகே சிங் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய வார்த்தை தான் என்றும் ஒருவேளை அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனம் புண்பட்டிருந்தால் அது வருந்தத் தக்கது என்றும் கூறியுள்ளார்.
என்னை மட்டுமே சிலர் டார்கெட் செய்து வருகிறார்கள் என்றும் ஜனநாயக உரிமைக்காகவும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவர் நான்தான் என்றும் ஒரு சிலர் உள்நோக்கத்துடன் தன்னை விமர்சனம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஹிந்து சமுதாயத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது என்றும் கேரளா போல சிறுபான்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி விடக் கூடாது என்ற கவலையில் நாங்கள் போராடி வருகிறோம் என்றும் ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்கள் மூலம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.