தமிழ்நாடு
மதம் மாற்றும் தீயசக்திகளின் கையாளாக ரஞ்சித் செயல்படுகிறார்: எச்.ராஜா கடும் குற்றச்சாட்டு!
மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது மீண்டும் அந்த விவகாரம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சித்த ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கும் முன்னர் நீதிபதிகள் அவரிடம், ஆயிரம் ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? இன்றும் அரசு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கும் போது மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியும் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் முன்ஜாமீன் வழங்கினர்.
ஆனால் சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பா.ரஞ்சித் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம்.
மேலும் மதம் மாற்றும் ஒரு சில தீயசக்திகளின் கையாளாக ரஞ்சித் செயல்படுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவர் பேசுவதில் உள்நோக்கம் கொண்ட பொய் உள்ளது. அதனால், ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம். அவரது படங்களை புறக்கணித்து அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார் எச்.ராஜா.