தமிழ்நாடு
யாரோ டப்பிங் பேசியதற்கெல்லாம் மன்னிப்பு கேட்ட எச்.ராஜா!
கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தை அவதூறாக, தரக்குறைவாக நீதிமன்றமாவது மயிராவது என்று ஆவேசமாக கூறினார்.
இந்த விவகாரம் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவ பெரும் சர்ச்சை உருவாகியது. இதனையடுத்து அந்த வீடியோ காட்சியில் பேசியது தான் இல்லை என்றும், யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார்கள் என்றும் எச்.ராஜா மறுத்தார். இதற்கு மற்றொரு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து எடிட் செய்த வீடியோ என எல்லாம் கூறினார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான எச்.ராஜா நீதிபதியின் இருக்கைக்கு முன் போய் நின்றார். அவர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி சத்தமாக படித்தார். அதில், போலீஸார் என்னை தடுத்தபோது உணர்ச்சிவயப்பட்டு தெரியாமல் பேசிவிட்டேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார். இந்நிலையில் முன்னதாக அந்த வீடியோ காட்சியில் பேசியது தான் இல்லை என்றும், யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார்கள் என எச்.ராஜா கூறியிருந்தது நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது. யாரோ டப்பிங் பேசியதற்கெல்லாம் எச்.ராஜா மன்னிப்பு கேட்டிருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம் தான் என நெட்டிசன்கள் கிண்டலடிக்கிறார்கள்.