தமிழ்நாடு
கிணற்றுத் தவளை ஸ்டாலின், உலகத் தவளை எச்.ராஜா: டுவிட்டரில் வார்த்தைப்போர்!
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் இதற்கு எதிர்மாறாக தமிழகத்தில் பாஜக உள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் பாஜக கூட்டணியை சேர்ந்த அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார், மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். குறிப்பாக பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் ஒருவர்.
இந்நிலையில் மத்தியில் தமிழகத்துக்கு முன்னிரிமை கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், கர்நாடகம், குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை என மு.க.ஸ்டாலினை விமர்சித்தார். எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த சுப.வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், கிணற்றுத் தவளை 37 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. “உலகத் தவளை “யோ, கட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றதையே பெரும் வெற்றியாய்க் கருதுகிறது. ஐயோ பாவம் என எச்.ராஜாவை உலகத்தவளை என விமர்சித்துள்ளார்.