தமிழ்நாடு
எச்.ராஜா-ஆளுநர் சந்திப்பு: குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதா ஆளுநர் மாளிகை?
நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்தது. அவர் வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் முறையில் பேசியும், செயல்பட்டும் வருகின்ற பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா காவல் துறையால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 25-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அரை மணி நேரம் பேசியிருப்பது பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.
காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளின் புகலிடமாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டதா? தமிழக காவல் துறையால் தேடப்பட்ட குற்றவாளி எஸ்.வி.சேகர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் வலம் வருகிறார். தற்போது எச்.ராஜா ஆளுநரைச் சந்தித்து உரையாடி வருகிறார். எச்.ராஜாவிடம் பேசப்பட்ட விவரம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு ஆளுநர் அறிவிக்க வேண்டும் என்று முத்தரசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.