தமிழ்நாடு
அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் நீக்கம்?: ஜெயக்குமார் விளக்கம்!
குட்கா ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இல்லங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று சிபியை அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரையும், டிஜிபி ராஜேந்திரனையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இறுதி தீர்ப்பு வரும் வரை சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதிகள் தான். குற்றவாளி என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றார்.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று புகார் உண்மையா, இல்லையா என்பது தீர்ப்பு வந்த பிறகுதான் தெரியும். பின்னர் தான் நீக்குவதற்காகத் தார்மீக உரிமையை எழுப்ப முடியும். இந்த நிலையில் அவர்களை நீக்குவதற்கான வாய்ப்பில்லை என்றார். தொடர்ந்து 2ஜி விவகாரம் வந்த நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டார்களா எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.