தமிழ்நாடு
அதிமுகவின் நிழல் பொதுச்செயலாளர் குருமூர்த்தி: தினகரன் அட்டாக்!
அதிமுகவின் நிழல் பொதுச்செயலாளராக குருமூர்த்தி உள்ளதாகவும், டெல்லியின் உத்தரவின் பேரில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழக அரசு தூர்வாரும் பணி என்ற பெயரில் செய்யும் முறைகேடுகளைக் கண்டித்து அம்மா முன்னேற்ற மக்கள் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நேற்று கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, பாஜகவுக்காகத்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது. குருமூர்த்திதான் அதிமுகவின் நிழல் பொதுச் செயலாளராக செயல்படுகிறார். டெல்லியில் இருந்து வரும் உத்தரவின்பேரில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் தினகரன்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது தனிமரமாக உள்ள பன்னீர்செல்வம், நான் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறுகிறார். அப்படியென்றால் என்னைப் பார்த்தால் பயம் இருக்கிறதுதானே. அதனால்தான் இவர்களைத் தைரியமில்லாதவர்கள் என்று குருமூர்த்தியே சொல்லியுள்ளார் என்றார். மேலும் வர உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இவர்களை பார்த்துக்கொள்கிறேன் என்றார் சவாலாக.