தமிழ்நாடு

சசிகலா ஒரு சாக்கடையா..!?- சர்ச்சையாக பேசி பற்றவைத்த குருமூர்த்தி

Published

on

துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்றார். அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தானும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பல விஷயங்களைப் பேசினார் குருமூர்த்தி. ஒரு கட்டத்தில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அதிமுக, சசிகலாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும், அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். பலரும் ரஜினி, அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து 2017 ஆம் ஆண்டு முதலே சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், அவர் நிச்சயம் கட்சித் தொடங்குவார் என்று கூறி வந்தவர் குருமூர்த்தி. தற்போது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்து விட்டார் ரஜினி. இந்த நிலையிலும், அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில், ‘1996 ஆம் ஆண்டைப் போலவே, இப்போதும் வாய்ஸ் கொடுத்து, தன் அரசியல் ஆதரவு நிலைப்பாட்டை ரஜினி எடுப்பார்’ என்று தூண்டி விட்டுள்ளார் குருமூர்த்தி. ரஜினி, எப்படியும் இனி அரசியல் குறித்து பேச வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

ரஜினி, அரசியலுக்கு வரும் பட்சத்தில் அது திமுகவுக்கு மிகப் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று சொல்லப்படும் நிலையில், அதைத் தடுக்க ரஜினி என்கிற ஆஸ்திரம் தான் பயன்படும் என்று குருமூர்த்தி கணித்திருந்தார். அதன்கு தன்னால் ஆன அனைத்துக் காரியங்களையும் குருமூர்த்தி செய்து வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் குருமூர்த்தியின் அனைத்து சாணக்கிய கணக்குகளையும் தவிடு பொடியாக்கினார் ரஜினி.

இப்படியான சூழலில், திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைந்திட வேண்டும் என்னும் நோக்கில் குருமூர்த்தி, ‘வீடு பற்றியெரியும் போது, கங்கை ஜலம் தான் வேண்டும் என்று காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க வேண்டும். அதைப் போல அதிமுக, சசிகலாவை இணைத்துக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் இருந்தால், அதை செய்யவும் தயங்கக் கூடாது’ என்று துக்ளக் விழாவில் பேசியுள்ளார். சசிகலாவை அவர் வெளிப்படையாகவே சாக்கடை என்று கூறியுள்ளார். இதனால் அமமுகவினர் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இன்னும் சிலரோ, ‘இவர் ரஜினியையே சாக்கடை ஜலமாகத் தான் எண்ணியிருப்பார்’ என்றும் விமர்சனங்களை வைக்கின்றனர்.

 

Trending

Exit mobile version