தமிழ்நாடு
இன்று கரையை கடக்கும் ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!
![gulab today - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/gulab-today.jpg)
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறியது என்பதும் இந்த புயலுக்கு ‘குலாப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து இன்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையே ‘குலாப்’ புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் கனமழை பெய்யும்.
நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் நாளை மறுதினம் மற்றும் செப்டம்பர் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.