இந்தியா
49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. இந்த பொருட்களுக்கு எல்லாம் இனி வரி குறையும்..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில் ஷார்ப்னர்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திரவ வெல்லத்தின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் அல்லது 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்தும், பான் மசாலா மற்றும் குட்கா வணிகங்களில் வரி ஏய்ப்பைத் தடுப்பது குறித்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பென்சில் ஷார்ப்னர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் ராப் என்பது ஒரு வகையான திரவ வெல்லத்திற்கும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்ட இந்த வகை வெல்லத்தின் மீது ஜிஎஸ்டி வரி 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது.
மேலும் ஜிஎஸ்டி இழப்பீட்டின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை முழுவதுமாக இன்று முதல் செலுத்தப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் அனைத்து தொகையும் செலுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.