இந்தியா
ஆளுநர் எழுதிய காதல் கடிதம்: குமாரசாமி மரண கலாய்!
![Kumarasamy 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Kumarasamy-1.jpg)
கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா இரண்டுமுறை கடிதம் எழுதி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினார். ஆனால் குமாரசாமி அதனை காதல் கடிதம் என சட்டசபையில் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.
கர்நாடக அரசியலில் சில எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அதனை காப்பாற்றிக்கொள்ள குமாரசாமி பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சட்டசபையில் இரண்டு நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் விவாதம் செய்து காலத்தை ஓட்டுகிறார்.
இந்நிலையில் முதல்நாள் ஆளுநர் வஜுபாய் வாலா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி இருந்தார். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனையடுத்து இரண்டு முறை காலக்கெடு விதித்து இரண்டு கடிதங்களை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டார் ஆளுநர்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாத குமார்சாமி ஆளுநரின் கடிதத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் நேற்று பேசிய குமாரசாமி, ஆளுநரிடமிருந்து அரசுக்கு வந்திருக்கும் இரண்டாவது காதல் கடிதம் இதுதான என அந்த கடிதத்தை படித்தார்.
மேலும், சதித்திட்டங்கள் குறித்து பலரும் எனக்கு எச்சரித்து அமெரிக்கா செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தினர். ஆளுநர் மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் அவரின் இரண்டாம் காதல் கடிதம்தான் எனக்கு வருத்தமளிக்கிறது. குதிரை பேரம் குறித்து 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு தெரியுமா?
அவையில் இன்னும் 25-26 எம்.எல்.ஏக்கள் பேச வேண்டியிருக்கிறது. அவர்கள் அவைக்கு வர சபாநாயகர் இன்னும் கால அவகாசம் அளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகரே முடிவெடுக்கட்டும். டெல்லியால் எனக்கு உத்தரவிட முடியாது. ஆளுநர் அனுப்பிய கடிதத்திலிருந்து மட்டும் என்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.