தமிழ்நாடு
ஸ்டெர்லைட் போராட்டம்… வெளிநாட்டு நிதி… ஆளுநர் ஆதாரத்தை தர வேண்டும்: கனிமொழி காட்டம்!
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் கூறியதற்கு கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன். ஆளுநர் ஆதாரத்தை தர வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.