தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Published

on

ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழப்பது மட்டுமின்றி, தங்கள் உயிரையும் மாய்த்து வருகிறார்கள். ஆகவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை இயற்றுவதற்கு, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி கடந்த 6 ஆம் தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கடந்த 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்ட சபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த தடைச் சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இந்நிலையில், 2-வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டப் பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதல் அமைச்சர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

தண்டனை

ஆன்லைனில் ரம்மி விளையாடினால், 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 5,000 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version