தமிழ்நாடு
ஆளுநர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பாடம் நடத்திய கனிமொழி!
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள் குறித்து பேசினார். மேலும் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்யும் முக்கியமான மசோதாக்கள் உட்பட சுமார் 20 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் தமிழ்நாடு ஆளுநர். தமிழகத்தில் மட்டும் இந்த நிலை இல்லை, மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா, நாகலாந்து என எங்கெல்லாம் பாஜக அரசுகள் இல்லையோ அங்கெல்லாம் ஆளுநர்களால் இதே நிலை தான் உள்ளது.
பாஜக அரசு இல்லாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களிடம் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஆளுநர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, இந்த நாடு கூட்டாட்சியின் படி செயல்படும் நாடு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள் என பேசினார் கனிமொழி.
தொடர்ந்து பேசிய அவர், ஆனால் நீங்கள் இதையெல்லாம் கேட்கமாட்டீர்கள். காரணம் இங்கே ராகுல் காந்தி பேசும்போது அதை கேட்காமல் நீங்கள் குரல் எழுப்பி கொண்டிருந்தீர்கள். கவனிப்பது, கற்றுக் கொள்வது எல்லாம் உங்களுக்கு தெரியாது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பொருட்படுத்தாது, மக்களின் குறைகளை கண்டுக்காத, பத்திரிக்கைகளின் விமர்சனங்களை பொருட்படுத்தாத ஒரு ஆட்சியை வீழ்த்த எதிரிகளே தேவையில்லை. அவர்கள் தானாகவே வீழ்ந்து போவார்கள் என திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு பேசினார்.