தமிழ்நாடு
ஆளுநர் செயல்… வரம்புகளுக்கு மீறியது: திருச்சி சிவா அதிருப்தி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது.
ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி திருச்சி சிவா, சட்ட மசோதாவை அவர்களால் வைத்துக்கொள்ள முடியாது. அப்படியென்றால் அதை அவர்கள் நிராகரிக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை தான் ஆளுநர் எந்த மசோதாவையும் கையெழுத்திடாமல் வைத்துக்கொள்ளலாம். பின்னர் மறுக்கிறேன் எனச் சொல்ல வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றாது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்கள் இயற்றுகின்ற போது அங்கு ஆளுநராக பொறுப்பில் இருப்பவர் அதற்கு ஒப்புதல் தரவேண்டியது அவர்களது கடமை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டமன்றத்தின் மாண்புகளை மீறும் வகையில் செயல்படுவது எல்லாம் அவரது வரம்புகளுக்கு மீறியதாகத்தான் எல்லோரும் கருத முடியும் என்றார்.