உலகம்
இப்படி செய்தால் கூகுள் சேவைகள் நிறுத்தப்படும்! ஆஸ்திரேலியாவுக்கு கூகுள் எச்சரிக்கை!!
ஆஸ்திரேலியாவில் செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு பணம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு கூகுள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட தேடுபொறிகளும், சமூகவலைதளங்களும் உள்நாட்டு செய்திகளை ஒரு சேவையாக வழங்கி வருகின்றன. இதற்காக அங்குள்ள செய்திநிறுவனங்களுடன் இணைந்து முக்கிய செய்திகள், மக்களுக்கு பயனுள்ள செய்திகள், உலக செய்திகள் அனைத்தும் பெறப்பட்டு அந்தந்த தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் செய்தி வழங்கல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றிற்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள், உள்நாட்டு செய்திகளை வழங்கும் போது அந்தந்த செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது. மேலும், அவ்வாறு பணம் செலுத்த தவறினால் மில்லியன் டாலர் கணக்கில் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் சட்டம் இயற்றப்பட உள்ளது.
இதற்கு கூகுள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோலொரு சட்டம் இயற்றப்பட்டால் ஆஸ்திரேலியாவில் கூகுள் சேவைகளை நாங்கள் நிறுத்த நேரிடும் என்றும், இதனால் மக்களுக்கு கூகுள் சேவைகள், தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.