தமிழ்நாடு
கூகுள் பே, பேடிஎம் ஆப்களுக்கு தடை?- பின்னணி என்ன
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி, மாலை 7 மணியோடு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் பரப்புரை முடிய இன்னும் மூன்று நாட்களே மீதம் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக பல்வேறு வாக்குறுதிகளை கட்சி சார்பில் கொடுக்கப்பட்டு வருகின்றன.
சில அரசியல் கட்சிகள், மக்கள் தங்களுக்கு வாக்குச் செலுத்த வேண்டும் என்னும் நோக்கில் தேர்தல் சமயத்தில் பணப் பட்டுவாடா செய்து வருகின்றன. தமிழகத்தில் இதற்கு முன்னரும் பல தேர்தல்களில் பணப் பட்டுவாடா என்பது தேர்தலிப் பெருமளவு எதிரொலித்தது. இதனால், இந்த முறை தேர்தல் ஆணையம், பணப் பட்டுவாடாவை தவிர்க்க தீவிர சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதன் காரணமாக தினம் தினம் பல கோடி ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் பணப் பட்டுவாடாவானது நடைபெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்படியான முயற்சிகளைத் தடுக்க, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் வரை ஆன்லைன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசில் வட்டாரங்களில் பரபரக்கப்படுகிறது.