இந்தியா
அப்பாடா… வேலைநீக்க நடவடிக்கை இல்லை.. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் ஊழியர்கள் நிம்மதி!
உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உபெர் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அந்நிறுவனத்தின் சிஇஓ உறுதி அளித்துள்ளதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அமேசான் நிறுவனம் சுமார் 18,000 ஊழியர்களையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கூகுள், ஆப்பிள், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்கனவே வேலை நீக்க நடவடிக்கை எடுத்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கை எடுத்தாலும் ஆசிரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உபெர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. உபேர் நிறுவனத்தின் சிஇஓ கோஸ்ரோஷாஹி சமீபத்தில் அளித்த பேட்டியில் உபேர் நிறுவனத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு தேவையான சம்பளம் மற்றும் வசதிகள் தொடர்ந்து செய்து கொடுக்க முடியும் என்றும் இன்னும் 15 வருடங்களுக்கு எங்களால் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்காமல் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உபெர் நிறுவனம் கடந்து சில மாதங்களாக செலவுகளை குறைக்க ஒரு சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இதுவரை வேலை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இனி மேலும் எடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.