இந்தியா
தடுப்பூசி போட்டு கொண்டால் தங்க மூக்குத்தி: அதிரடி அறிவிப்பால் குவியும் பெண்கள்!
தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குஜராத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகியுள்ளதை அடுத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை அந்த பகுதியில் உள்ள நகைக்கடை அமைப்பு ஒன்று அறிவித்து உள்ளது என்பதும் அதன்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்திகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு காரணமாக ராஜ்கோட் பகுதிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பெண்களும் ஆண்களும் குவிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.