உலகம்
உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி: எச்சரிக்கும் ஐ.நா.!
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. பொதுவாக கோடை காலம் வந்துவிட்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு தான். ஆனால், உலக அளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
தண்ணீருக்கு நெருக்கடி
காலநிலை மாற்றம் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தினால் உலக அளவில் தண்ணீருக்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் அனைத்தும் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. காலநிலை மாற்றம் மற்றும் நுகர்வு கலாச்சாரம் ஆகியவற்றின் அதிதீவிர வளர்ச்சியின் காரணமாக தண்ணீர் நெருக்கடி உண்டாகும் அபாயம் உள்ளது. மேலும், அதிகளவிலான நுகர்வு மற்றும் மாசுபாட்டின் காரணமாக தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதே சமயம், காலநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலை அதிகரித்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை தீவிரமாக்கி வருகின்றன. வருடத்திற்கு 300 கோடி மக்கள், தண்ணீர் நெருக்கடியில் வாழ்கின்றனர் என ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் கூறுகையில், மனித குலத்தின் உயிர் நாடியான தண்ணீர் மாசினாலும், காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்து போய் வருகின்றது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றமானது நம் கண் முன்னே அரங்கேறி வருவதை நம்மால் காண முடிகிறது.
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான வன விலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதனுடைய தீவிரத்தை கடந்த 10 வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பூமி வெப்பமடைதலை குறைக்கும் செயல்பாடுகளை விரைந்து நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் மனித இனம் உள்ளது. வெகு விரைவாகவே அதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ளும் என நம்புவோம். அப்படி நடந்தால் மட்டுமே உலக அளவில் தண்ணீர் நெருக்கடிக்கான அபாயத்தை தவிர்க்க முடியும்.