தமிழ்நாடு
கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்குத் தடை – அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்குழு உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணர்குழு உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதில் கிரிஜா வைத்தியநாதன் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும், சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்டது தொடர்பாக சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்கவில்லை, உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் தேவைப்படும் அடிப்படை அனுபவம் பெற்றிருக்கவில்லை’ என்று கூறி அவரது நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய அரசு மற்றும் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.