தமிழ்நாடு
வேலூர் தேர்தலில் போட்டியிடும் பரிசுப் பெட்டகம்!
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனின் அமமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் திமுக, அதிமுக கட்சிகள் கடந்தமுறை நிறுத்திய அதே வேட்பாளர்களை இந்தமுறையும் களமிறக்கியுள்ளது. ஆனால் டிடிவி தினகரனின் அமமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
அதிமுக, திமுக, நாம் தமிழர் வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் என மொத்தம் 28 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தினகரன் கட்சி போட்டியிடா இந்த தேர்தலில் சுகுமார் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஆக தினகரன் கட்சி வேலூர் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பரிசுப் பெட்டகம் சின்னம் போட்டியிடுகிறது. இதன் மூலம் பரிசுப்பெட்டகம் சின்னம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது.