தமிழ்நாடு
திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி தடாலடி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசியுள்ளார்.
![Edappadi Palanisami - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Edappadi-Palanisami.jpg)
#image_title
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் நிலவிவந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் தொகுதிக்கு உட்பட்ட வேப்பம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக தேர்தல் தோல்வி பயம் காரணமாக 20 அமைச்சர்களை கூட்டணி கட்சிக்காக இறக்கியுள்ளது. தினமும் கிடா விருந்து போடும் இந்த அமைச்சர்கள் வீடு வீடாக சென்று ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவும் ஆயிரம் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். அதெல்லாம் உங்களுடைய பணம். கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை வாரி இறைக்கிறார்கள் இப்போது.
பொங்கலுக்கு வெல்லம் வாங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டுதான் இன்று வீதி வீதியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். திமுகவினர் வழங்கும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், ஓட்டு மட்டும் அதிமுகவுக்கு போடுங்கள் என்றார்.