தமிழ்நாடு
கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைப்பு!
தமிழகத்தில் கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சமையல் கேஸ் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2.38 கோடி பேர் மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 32 லட்சம் பேர் தங்களுக்கு மானியம் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டனர். மேலும், ஒவ்வொரு மாதமும் சமையல் கேஸ் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கேஸ் விலை 713 ஆகவும், அதற்கான மானியத்தொகை 174 ரூபாயாகவும் இருந்தது. கடந்த மே மாதம் கேஸ் சிலிண்டரின் விலை 569 ரூபாயாக இருந்தது. ஆனால் அப்போது மானியம் வழங்கப்படவில்லை. அதன்பிறகு 606 ரூபாய் முதல் 881 ரூபாயாக சிலிண்டர் விலை இருந்தது. மானியமும் அதற்கு தக்கவாறு 23.95 ரூபாய், 25.45 ரூபாய் என மாறுபட்டு வந்தது.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பலரும் வேலையிழந்தனர். குடும்பம் நடத்தவே வழியில்லாமல் போனது, இத்தகைய சூழலிலும் தற்போது சிலிண்டருக்கான மானியத்தொகை கண்டபடி குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பலருக்கு மானியத்தொகையே வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களது வங்கிக்கணக்கு புத்தகத்துடன் அந்தந்த கேஸ் ஏஜென்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கேஸ் ஏஜென்சி தரப்பில் கூறுகையில், பெட்ரோலிய அமைச்சகம் தான் இந்த மானியத்தொகையை முடிவு செய்வதாக தெரிவித்துள்ளது.