தமிழ்நாடு
திடீரென ரூ.50 உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிடும் என்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டரின் விலை ரூபாய் 25 உயர்ந்த நிலையில் ஒரு சில நாட்களில் மீண்டும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஒரே மாதத்தில் ரூபாய் 75 உயர்ந்ததால் சிலிண்டரின் விலை தற்போது 785 ஆக உள்ளது. பெட்ரோல் விலை 100ரூ தொட்டு விடும் என்ற அச்சத்தில் இருக்கும் நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் ரூபாய் ஆயிரத்தை தொட்டு விடுமோ என்ற அச்சம் இல்லத்தரசிகள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இரண்டு பேர்களின் நலனுக்காக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது டுவிட்டரில் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து கூறியதாவது: பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.