தமிழ்நாடு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரித்தது என்பதும் ஒரே ஆண்டில் ரூபாய் 285 உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சிலிண்டர் விலை ரூபாய் 15 உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய் 15 உயர்த்தி உள்ளதை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 915.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் ரூ.300 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 1000 என வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.