தமிழ்நாடு
நள்ளிரவில் கரையை தாண்ட உள்ள கஜா புயல்: சில தகவல்கள்!
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்த புயல் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்த புயலை அச்சத்துடன் எதிர்நோக்கியுள்ளது.
முழு அரசு இயந்திரமும் தயார் நிலையில் கஜா புயலை எதிர்கொள்ள உள்ளது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 80 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. இந்த புயலின் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாகையில் உச்சபட்ச எச்சரிக்கையாக 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வேடிக்கை பார்க்கவோ செல்ஃபி எடுக்கவோ யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
கஜா புயலின் காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தோ்வுகள் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தொடர்பாக மக்களை அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.