தமிழ்நாடு
கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது!
இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் தற்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல்லில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை தீவிரப்புயலாக கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
மேலும் நெய்வேலியில் 14 செ.மீ, விருத்தாச்சலம், செங்கல்பட்டில் 12 செ.மீ, சென்னை, காஞ்சிபுரத்தில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர், திருப்பூர், மதுரை, தேனி, திருச்சியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 7 மணியளவில் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது திண்டுகல்லில் மையம் கொண்டுள்ளது. இந்த கஜா புயல் மீண்டும் நாளை அரபிக்கடலில் சென்றடையும். திண்டுகல்லில் மையம் கொண்டுள்ள புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அரபிக்கடலில் சேரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.