இந்தியா
உபி மாநிலத்தில் திடீர் லாக்டவுன் அறிவிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு ஊசி போடுவதை அதிகரிக்கலாம் என்றும் லாக்டவுன் தேவையில்லை என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திடீரென உத்தரப்பிரதேச மாநிலத்தில் சற்றுமுன் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை லாக்டவுன் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு திங்கட்கிழமை காலை 7 மணிவரை அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊரடங்கு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது
அதேபோல் முழு ஊரடங்கும் போது பழம், பூ கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது
வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் முழுவதும் வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு அவர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.