தமிழ்நாடு
தமிழகத்தில் தேர்தலுக்குப் பின்னர் முழு லாக்டவுனா..?- அரசு முக்கிய தகவல்
இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை இது என்று சொல்லப்படும் நிலையில், தேர்தல் காலம் என்பதால் தமிழகத்தில் தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி, மாலை 7 மணியோடு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் பரப்புரை முடிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இப்படியான சூழலில் தேர்தல் முடிந்த அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் அதிக கட்டுப்பாடுகளுடன் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘யூகத்தின் அடிப்படையில் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பதை சொல்ல முடியாது. தொற்றுப் பரவலைப் பொறுத்து அரசு படிப்படியாகத் தான் முடிவெடுக்கும். மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அது தான் நம் கையில் இருக்கும் தீர்வு’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.