தமிழ்நாடு
திங்கள் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கா? இன்று அறிவிப்பு வெளிவரும் என தகவல்!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வந்த போதிலும் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
நேற்று தமிழகத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சுமார் 7,000 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் தற்போது தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து ஆலோசனை செய்ததில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் திங்கள் முதல் முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு மாதங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி இருந்தனர். அதே போன்ற ஒரு நிலை தற்போதும் ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.