இந்தியா
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்: நாளை முதல் புதிய மாற்றம்!
திருப்பதியில் கடந்த சில நாட்களாக இலவச தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் வழங்கப்பட்ட நிலையில் நாளை முதல் நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக திருமலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய இலவச டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் மூன்று இடங்களில் நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பதி அலிபிரி பேருந்து நிலையம் அருகே உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீநிவாசன் பக்தர்கள் தங்கும் அறை மற்றும் கோவிந்தராஜ சுவாமி இரண்டாவது மற்றும் மூன்றாவது சக்கரத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச டிக்கெட்டுக்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்கான நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு சூரிய உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் இது குறித்த விவரங்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் முடிவு எடுக்க இருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.