இந்தியா

நாளை முதல் ஆட்டோடெபிட் முறையில் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி உத்தரவு

Published

on

நாளை முதல் ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள் செலுத்தவேண்டிய பணத்தை ஆட்டோ டெபிட் என்ற முறையில் செலுத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக நாளிதழ் படிப்பது, ஓடிட்யில் படம் பார்ப்பது, மின்சார, மொபைல் பில் கட்டணம் செலுத்துவது உள்பட செலுத்த வேண்டிய கட்டணத்தை ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தி வந்தனர்.

ஒருவேளை நாம் செலுத்த மறந்து விட்டாலும் வங்கி நமது ஆட்டோ டிபெட் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு மாதமும் பணத்தை அனுப்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டதை அடுத்து நாளை முதல் அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் படி ஆட்டோ டெபிட் மூலம் பணத்தை ஒரு நிறுவனத்திற்கு வங்கிகள் செலுத்துவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பவேண்டும். இமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் இந்த நோட்டிபிகேஷனை பார்த்து வாடிக்கையாளர்கள் அந்த பணத்தை நிறுவனங்களுக்கு வழங்கலாம் என அனுமதி வழங்கினால் மட்டுமே பண பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த வேண்டும்.

இந்த அனுமதி 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள பரிவர்த்தனைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை 5,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில் ஒன் டைம் பாஸ்வேர்டு வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த பாஸ்வேர்டை வாடிக்கையாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பரிவர்த்தனை அனுமதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோடெபிட் கட்டுப்பாடுகளை மீறி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி பணத்தை வங்கி பரிவர்த்தனை செய்தால் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் பில், மின்சார பில் உள்பட அனைத்து பில்களையும் ஆட்டோ டெபிட் கட்டணத்தை செலுத்த நோட்டிபிகேஷன் வரும்போது அதனை அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கூறியபோது ’ஆட்டோ டெபிட் முறையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் வங்கிகள் தங்கள் தொழில்நுட்பத்தை புதிய விதிமுறைகக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆட்டோ டெபிட் மூலம் சர்வசாதாரணமாக பணத்தை பெற்று வந்த நிறுவனங்கள் இந்த புதிய கட்டுப்பாட்டால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்பாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் ஒவ்வொரு மாதமும் வங்கி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி ஆட்டோ டெபிட் மூலம் பணத்தை பெற்று வந்தன. இனிமேல் வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனையை அனுமதித்தால் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வாடிக்கையாளர் அனுமதிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version