தமிழ்நாடு
இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: புதுவைக்கு பேருந்து சேவை தொடங்கியது!
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அதன்படி இன்று காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் இன்று முதல் புதுவைக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை மட்டுமே இன்னும் திறக்கப்படாமல் உள்ளன என்பதும் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்பதாலும் பேருந்து போக்குவரத்தும் 9 மணி வரை இருக்கும் என்பதாலும் பொதுமக்கள் தற்போது பயமின்றி வெளியே சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, அவ்வப்போது சானிட்சைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேருந்துகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை சரியாக கடைபிடித்தால் இன்னும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் பள்ளி கல்லூரிகள் திரையரங்குகள் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.