தமிழ்நாடு
பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் தொடக்கம்: இயல்பு நிலை திரும்பியது!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என ஏற்கனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று 9, 11ம் வகுப்பு பாடங்கள் தொடங்கின. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று முதல் வகுப்புகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை வகுப்பறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 முதல் 12 வரையிலான பள்ளி வகுப்புகளும் கல்லூரி வகுப்புகளும் தொடங்கப்பட்டு உள்ளதை அடுத்து இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது