கிரிக்கெட்
நேஷனல் டூட்டியிலிருந்து ஃபாதர் டூட்டிக்கு மாறிய ஹர்திக் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா. அவருக்கு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, நதாஷா ஸ்டான்கோவிக் என்கிற செர்பிய நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞருடன் எங்கேஜ்மென்ட் நடந்தது. தொடர்ந்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தபோது பாண்டியா மனைவியுடன் இருந்தபோதும், அதற்குப் பின்னர் ஐபிஎல் தொடர் நடக்கும் என்பதால் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடினார் பாண்டியா. மும்பை அணி, இந்த முறை கோப்பை வெல்வதற்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணியிலும் பாண்டியா இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பேட்டிங்கில் கலக்கினார். அவரின் அதிரடி காரணமாக டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. டி20 போட்டிகளுக்கான தொடர் நாயகன் விருதும் பாண்டியாவுக்குக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியா திரும்பிய பாண்டியா, குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். தனது குழந்தைக்கு அவர் பாலூட்டும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘நேஷனல் டூட்டி முடிந்தது. தற்போது ஃபாதர் டூட்டி’ என்று கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார். பாண்டியாவும் அவரின் க்யூட் குட்டியும் இருக்கும் போட்டோ படுவைரலாக மாறி வருகிறது.