இந்தியா
‘மோசமள்ள மிக மோசமான சூழலை நோக்கி கொரோனா தொற்று’- இந்திய அரசு குமுறல்
இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான அளவில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அபாயகர அளவை எட்டியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் குறித்து மிகுந்த எச்சரிக்கை பொருந்திய கருத்தை வெளியிட்டுள்ளது.
‘இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் மோசமள்ள, மிக மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நொந்து கொண்டுள்ளார்.
அதேபோல நாட்டின் தடுப்பூசி நிர்வாக குழுவின் தலைவர் வி.கே.பால், ‘நாட்டில் வந்து கொண்டிருக்கும் தரவுகள், கொரோனா தொற்றுப் பரவல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது. நாம் எப்போது எல்லாம் கட்டுக்குள் வந்து விட்டது என்று நினைக்கிறோமோ, அப்போது வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். கொரொனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56,000க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.